காதலனைத் தேடிச் சென்ற கண்டி யுவதிக்கு நேர்ந்த விபரீதம்: மாத்தளையில் விடிய விடிய நடந்த கூட்டு வன்புணர்வு!
காதலனைப் பார்ப்பதற்காகக் கண்டியிலிருந்து மாத்தளைக்கு நம்பிக்கையோடு பயணித்த இளம் யுவதி ஒருவருக்கு, எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்குக் கொடூரமான அனுபவம் ஒன்று நேர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் மாத்தளை மாவட்டத்தின் வில்ஜமுவ நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த யுவதி தனது 33 வயதுடைய காதலனைச் சந்திப்பதற்காக வில்ஜமுவ பகுதிக்குச் சென்றுள்ளார். எனினும், அங்குச் சென்ற யுவதியை அவரது காதலன், தனது நண்பர் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குதான் அந்த யுவதியின் வாழ்க்கையை உலுக்கிய கொடூரம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
அங்கு வைத்து காதலன் ஏனைய மூன்று நண்பர்களுக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து வரவழைத்துள்ளார். பின்னர், அவர்கள் அனைவரும் மதுபானம் அருந்திவிட்டு, அந்த யுவதியை விடிய விடிய கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இத்துடன் நின்றுவிடாது, 55 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபர் பராமரித்து வந்த வேறொரு வீட்டிற்கும் அந்த யுவதியைக் கூட்டிச்சென்று மீண்டும் கொடூரமாகப் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்கள் 37 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மறுநாள் காலை, அந்த நரகத்திலிருந்து எப்படியோ தப்பியோடிய யுவதி, பேருந்து மூலம் கண்டிக்குத் திரும்பியுள்ளார். எனினும், கடுமையான இரத்தப்போக்கு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உடனடியாக உடுதும்பர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் யுவதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவரைச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் (JMO) ஒப்படைத்த போதே, தனக்கு நேர்ந்த இந்த அநீதியை அவர் வாக்குமூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இதனை அடுத்து, உடுதும்பர பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு, மேலதிக விசாரணைகளுக்காக வில்ஜமுவ பொலிஸாரிடம் வழக்கை ஒப்படைத்தனர். வில்ஜமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுமேத பண்டார மற்றும் பெண் பொலிஸ் பரிசோதகர் அனோமா குமாரி தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர், அதிரடியாகச் செயற்பட்டு காதலன் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாத்தளை நாவுல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது


