ஜுட் சமந்த
மஹவெவ: இலங்கையின் பாரம்பரிய பௌத்த கலாசார விழாக்களில் பிரதான இடத்தை வகிக்கும் தோரணக் கண்காட்சிகள், நவீன தொழில்நுட்ப ஒளியமைப்புகளுடன் மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், மஹவெவ பிரதேசத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட தோரணம் மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மஹவெவ – கல்அமுண ஸ்ரீ வர்தனாகார விகாரையின் தோரணக் குழுவினரால் மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்தத் தோரணம், நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக ஒளிரூட்டப்பட்டது.
இம்முறை இந்தத் தோரணம் அமைக்கப்பட்டுள்ள இடம் தான் தற்போதைய பிரதான ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. பரந்த இடவசதியைக் கொண்ட கல்அமுண விளையாட்டு மைதானத்தில் இந்தத் தோரணம் கம்பீரமாகத் தளம் அமைத்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் எவ்வித நெருக்கடியுமின்றி ஒரே நேரத்தில் இந்த ஒளிரும் கலைவடிவத்தைக் கண்டு ரசித்து வருகின்றனர்.
வெறும் ஒளியமைப்பு மாத்திரமன்றி, ஆன்மீகக் கதையையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் பின்னணியாகும். அந்தவகையில், இம்முறை பௌத்தர்களின் வாழ்வியலோடு பிணைந்த “கட்டஹாரி” ஜாதகக் கதையை மையமாக வைத்தே இந்தத் தோரணத்தின் கதைக்களம், கண்கவர் ஓவியங்கள் மற்றும் வர்ண விளக்குகளின் சேர்க்கையோடு தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் ஆன்மீக வழிகாட்டியான கல்அமுண ஸ்ரீ வர்தனாகார விகாரையின் விகாராதிபதி, வணக்கத்திற்குரிய எதாஉடகந்தே ஞானாலோக்க தேரரின் ஆசியுடனும், அவரது முன்னிலையிலும் இந்தத் தோரணம் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கலைஞர்களின் கடின உழைப்பில் உருவாகியுள்ள இந்தத் தோரணத்தைக் காண்பதற்கும், வார இறுதி நாட்களைக் கழிப்பதற்கும் நாடளாவிய ரீதியில் இருந்து தற்போது மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


