ஜூட் சமந்த
இலங்கையில் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்கள் (அன்னதானங்கள்) தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIs) மிக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த வெசாக் பண்டிகையை விடவும், இம்முறை பொசொன் காலத்தில் நாடளாவிய ரீதியில், குறிப்பாக வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பெருமளவிலான தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் டெங்கு: பிளாஸ்டிக்குக்கு தடை விழுமா?
“தற்போது நாம் மிகத் தீவிரமான டெங்கு பரவல் காலப்பகுதியில் இருக்கிறோம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது” என எச்சரிக்கும் உபுல் ரோஹண, கடந்த வெசாக் தன்சல்களின் முடிவில் டன் கணக்கில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் கொட்டப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, கோப்பி மற்றும் குளிர்பான தன்சல்களில் பிளாஸ்டிக் கோப்பைகளின் பயன்பாடு சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் இம்முறை மக்காத பொருட்களை சூழலில் வீசுவதை முற்றாகத் தவிர்க்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
களத்தில் 2000 PHI அதிகாரிகள்: தராதரம் பார்க்க மாட்டோம்!
பொசொன் தினத்திற்கு முன்னரே அனைத்து தன்சல் ஏற்பாட்டாளர்களுக்குமான ஆலோசனைகளும் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. பொசொன் தினத்திலும் அதற்கு அடுத்த நாட்களிலும் 2,000 இற்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். இதன்போது, ஏற்பாட்டாளர்களின் பதவியோ அல்லது அந்தஸ்தோ பார்க்கப்பட மாட்டாது; மக்களின் சுகாதார பாதுகாப்பு மட்டுமே முதன்மையாகக் கருதப்படும் என சங்கம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
பக்தர்களுக்கு உணவு வழங்குவது புண்ணியமான காரியம் என்றாலும், அது சூழலையோ அல்லது மக்களின் ஆரோக்கியத்தையோ சீரழிப்பதாக அமையக் கூடாது. விதிகளை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் தன்சல்களை நடத்துவோருக்கு எதிராக எவ்வித தயக்கமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.


