ஜுட் சமந்த
கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் நேற்று (18) மாலை இடம்பெற்ற பயங்கர வீதி விபத்து, உல்லாசப் பயணமாகச் சென்ற இளம் ஜோடியொன்றின் வாழ்க்கையை முற்றாகப் புரட்டிப்போட்டுள்ளது. மாரவில, மூதுகடுவ பகுதியில் அதிவேகமாக பயணித்த பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 24 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய காதலி உயிருக்குப் போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இந்த இளம் ஜோடி, மாரவில – மூதுகடுவ பகுதியின் வளைவான வீதியைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக அந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. எதிர்த்திசையில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த பேருந்து, வளைவில் தனது கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் தவறான பக்கத்திற்கு (Wrong lane) ஊடுருவி, மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதித் தள்ளியுள்ளது.
விபத்தின் வீரியம் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டு கடுமையான காயங்களுக்குள்ளாகினர். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் உடனடியாக இருவரும் மாரவில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொச்சிக்கடை – தளுவகொட்டுவ பகுதியைச் சேர்ந்த போரம படல்கே துலார தனஞ்சய சில்வா (24) என்ற இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் முன்பே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, அவருடன் பயணித்த நீர்கொழும்பு – பஹல கதிரான பகுதியைச் சேர்ந்த எமானுவேல் லோசனா குருளு போல் (20) என்ற யுவதி, பலத்த காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்களுக்கு நேர்ந்த இந்தத் திடீர் அசம்பாவிதம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, விபத்து நடந்த அடுத்த கணமே பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். எனினும், தப்பியோடிய சிலாபம் – ஒலிதளுவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சாரதி, பின்னர் மாரவில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேருந்து சாரதியின் பொறுப்பற்ற அஜாக்கிரதை வாகன ஓட்டமே இந்த கொடூர மரணத்திற்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டும் நிலையில், மாரவில பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


