உங்களுக்கு வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருக்கிறதா? அதுவும் புகையிலை இல்லாமல் வெற்றிலை மெல்லவே மாட்டீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கானது தான்!
இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் ஒரு பாரம்பரியப் பழக்கத்திற்கு, மிகக் கடுமையான சட்டப் பூட்டு விழுந்துள்ளது. இனிவரும் நாட்களில் நீங்கள் வாங்கும் வெற்றிலை பாக்கில் புகையிலை இருந்தால், அதனை விற்பனை செய்பவர்கள் நேரடியாக நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
வெற்றிலை பாக்குகளில் புகைக்காத புகையிலையை சேர்த்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக, இனி எவ்வித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் (PHI) பதில் தலைவர் உபுல் ரோஹண அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார், இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இலங்கையில் புகைக்காத புகையிலை தயாரிப்புகளை விற்பனை செய்வது நேற்றோ இன்றோ தடை செய்யப்பட்ட ஒன்று அல்ல. 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான அதிகாரசபை சட்டத்தின் கீழ், கடந்த 2016 செப்டம்பரில் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, இந்தத் தடை ஏற்கனவே சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டின் பாரம்பரிய கலாசார காரணங்களை முன்னிறுத்தி, பொது சுகாதார பரிசோதகர்கள் இதுவரை மென்மையான போக்கைக் கையாண்டு, விழிப்புணர்வுகளை மட்டுமே வழங்கி வந்தனர்.
ஆனால், இந்த மென்போக்கை வியாபாரிகளும் நுகர்வோரும் சாதகமாகப் பயன்படுத்தியதால், தற்போது விபரீதம் அதிகரித்துள்ளது. இலங்கையில் தற்போதைய புள்ளிவிபரங்களின்படி, வருடமொன்றுக்கு 1,750 முதல் 1,900 வரையான புதிய வாய்ப் புற்றுநோய் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த மரணப் பொறியில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே தங்களது இறுதி இலக்கு என உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது வெற்றிலை விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்டம் அல்ல; மாறாக, ஆயிரக்கணக்கான உயிர்களைக் காக்கும் முயற்சி” எனத் தெரிவித்துள்ள PHI சங்கம், பொதுமக்கள் இப்போதாவது விழிப்படைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கமைய, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இனிவரும் நாட்களில் திடீர் சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதால், வெற்றிலை வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஜுட் சமந்த


