நள்ளிரவு 1:00 மணி… ராகம பகுதியில் உள்ள விடுதியொன்றில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒருவருக்கு, அடுத்த சில நிமிடங்களில் மரண பயம் காட்டியுள்ளது ஒரு கும்பல். திரைப்பட பாணியில் விடுதிக்குள் புகுந்த 5 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர், அந்த நபரை வலுக்கட்டாயமாக சொகுசு கார் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளனர். கார் இருளைக் கிழித்துக் கொண்டு அதிவேகமாகப் பறக்க, உள்ளே நடந்ததோ ரத்தக் களரி.
காரினுள் வைத்து அந்த நபரை சரமாரியாகத் தாக்கிய கடத்தல்காரர்கள், கூர்மையான ஆயுதங்களால் உடலின் பல இடங்களிலும் வெட்டியுள்ளனர். அத்தோடு நிறுத்தாமல், அதிகாலை 2:00 மணியளவில் வென்னப்புவ பகுதியில் உள்ள ‘கின் ஓயா’ ஆற்றுக்குள் தூக்கி வீசிவிட்டு, அவர் இறந்துவிட்டார் என்றெண்ணி அந்தக் கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளது.
ஆனால், அங்குதான் அந்தத் துணிகரத் திருப்பம் நிகழ்ந்தது. ஆழமான வெட்டுக்காயங்களுடன், நள்ளிரவு காரிருளில் ஆற்று வெள்ளத்தில் வீசப்பட்ட போதிலும், அந்த நபர் தனது இறுதி மூச்சு வரை போராடத் துணிந்தார். மரணத்தின் விளிம்பிலிருந்து உயிருக்காகப் போராடிய அவர், காயங்களின் வலியையும் பொருட்படுத்தாமல் ஆற்று நீரில் நீந்தி, அதிகாலை வேளையில் ஒருவழியாகக் கரை சேர்ந்துள்ளார்.
அதன் பின்னர், இன்று (19) அதிகாலை 6:30 மணியளவில் கின் ஓயா ஆற்றங்கரைக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் நபரொருவர் விழுந்து கிடப்பதாக வென்னப்புவ பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, உடனடியாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பொலிஸ் விசாரணையில், பாதிக்கப்பட்டவர் கந்தானை – நாகொட, ஆண்டியாகமா குடியிருப்பை சேர்ந்த 42 வயதுடைய ஸ்தோம்புகே தினேஷ் சுரங்க பொதேஜு எனத் தெரியவந்துள்ளது. தன்னை கடத்திய கும்பலில் வென்னப்புவ – நயினாமடம பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, நீண்டகாலப் பணத்தகராறு ஒன்றே இந்தக் கொடூரக் கடத்தலுக்கும் கொலை முயற்சிக்கும் காரணம் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்ய வென்னப்புவ பொலிஸார் வலைவீசியுள்ளனர்.
ஜுட் சமந்த


