களத்தில் இருந்து விடைபெறுகிறாரா CR7? கால்பந்து உலகை உலுக்கிய ரொனால்டோவின் அதிரடிப் பேட்டி!
சர்வதேச கால்பந்து அரங்கில் தனித்துவமான முத்திரை பதித்த போர்த்துக்கல் அணியின் நட்சத்திரத் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஓய்வு குறித்த தகவலை வெளியிட்டு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 41 வயதான இந்த ஜாம்பவான், அடுத்த ஆண்டோடு தனது கால்பந்து பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும் என்பதை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.
“அநேகமாக இதுவே கால்பந்தில் எனது கடைசி ஆண்டாக இருக்கும். ஒரு பிரம்மாண்டமான வரலாற்றை நிலைநாட்டிவிட்டு விடைபெறவே விரும்புகிறேன்” என பிரபல ‘Vogue’ சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டு ஸ்போர்ட்டிங் அணியூடாக அறிமுகமாகி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மட்ரிட் மற்றும் யுவென்டஸ் போன்ற முன்னணி அணிகளுக்காக விளையாடி எண்ணற்ற வெற்றிக் கிண்ணங்களை குவித்த ஒரு மகத்தான சகாப்தம் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஐந்து முறை உலகின் மிக உயரிய ‘பாலன் டி’ஓர்’ விருதை வென்ற ரொனால்டோவின் வெற்றிக் கோப்பைகள் வரிசையில் உலகக் கிண்ணம் மாத்திரம் கைகூடாமலேயே போனது. இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரிலும் போர்த்துக்கல் அணி தோல்வியைத் தழுவியதால், கால்பந்தின் அந்தத் தலையாய கனவு எட்டாக்கனியாகவே முடிவுக்கு வந்தது.
இருப்பினும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது பயணத்தில் கழக மற்றும் சர்வதேச மட்டங்களில் 976 கோல்களைக் குவித்து பிரமிக்க வைத்துள்ளார். தற்போது சவூதி புரோ லீக் தொடரில் அல்-நஸர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, கால்பந்து வரலாற்றின் உச்ச மைல்கல்லான 1,000 கோல்களை எட்டுவதை நோக்கி அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்.
கால்பந்துக்கு பின்னரான தனது வாழ்க்கை குறித்து மனம் திறந்த அவர், “கால்பந்தை விட்டு விலகும்போது ஒரு மிகப்பெரிய வெற்றிடம் உருவாகும். அதனை நிரப்புவதற்கு பல வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 25 வருடங்கள் பல தியாகங்களைச் செய்து உழைத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் அதிக பயணங்களை மேற்கொள்வது, ‘பேடல்’ (Padel) விளையாடுவது மற்றும் இதுவரை சம்பாதித்ததை மகிழ்ச்சியோடு அனுபவிப்பது என ஓய்வுக் காலத்தை கழிக்கத் திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.


