புத்தளம்: அபிவிருத்திகளும், நவீன கல்வி வசதிகளும் வெறும் வார்த்தைகளாக மட்டுமன்றி, செயல் வடிவம் பெறும்போதுதான் ஒரு சமூகத்தின் எதிர்காலம் பிரகாசமடைகிறது. அந்த வகையில், வடமேல் மாகாணத்தின் முக்கிய கல்விக்கூடங்களில் ஒன்றான புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலய சமூகத்தின் கால் நூற்றாண்டு காலப் பெரும் கனவு, நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக நனவாகத் தொடங்கியுள்ளது.
64 வருடங்களுக்கும் மேலான நீண்டதொரு வரலாற்றைக் கொண்ட இப்பாடசாலையில், போதிய இடவசதிகளின்றி மாணவிகள் எதிர்நோக்கி வந்த சவால்களுக்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பாரிய தீர்வொன்றை வழங்கியுள்ளது. பாடசாலைக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த 25 வருடங்களாக விடுக்கப்பட்டு வந்த கோரிக்கைகள், இதோ இப்போது சாத்தியமாகியிருக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் “சகோதர, சகோதரிகளின்” தொடர்ச்சியான அரசியல் மற்றும் சமூகக் களப் போராட்டங்களின் விளைவாக, தற்போதைய அரசாங்கத்தினால் இதற்கென 29 மில்லியன் ரூபா நிதி நேரடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் நிர்மாணிக்கப்படவுள்ள 90×25 அடி பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்ட புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா, நேற்று (04.07.2026) காலை மிக விமரிசையாக அரங்கேறியது.
கல்லூரி அதிபர் திருமதி A.L. ஸரீனா பர்வீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
அமைச்சருடன் இணைந்து, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைப்பாளருமான கயான் ஜானக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான M.J.M. பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாத் அஹ்மத் ஆகியோர் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் இந்நிகழ்வுக்கு பலம் சேர்த்தனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவானது, புத்தளம் மண்ணின் பெண் கல்வியில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.







