கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாகப் பணியில் இணைந்த முஸ்லிம் சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம் தற்போது புதிய அரசியல் மற்றும் சமூகத் தளத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இப்பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ சுகாதார அமைச்சரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்களின் தரப்பு நியாயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு மிக விரிவாகக் கொண்டு செல்லப்பட்டன.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதன் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை நாடாளுமன்றக் குழுவினர் உறுதியாகச் சுட்டிக்காட்டினர். மாறாக, அவர்களது மத உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், தேவைகளுக்குப் பொருத்தமான மாற்றுச் சீருடை நடைமுறையை உத்தியோகபூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்தது.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் N.T.M. தாஹிர், பாராளுமன்ற உறுப்பினர்களான M.L.A.M. ஹிஸ்புல்லாஹ், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹரூப், M. நிஸாம் காரியப்பர், M.S. உத்துமாலெப்பை மற்றும் M.S. அப்துல் வாசித் ஆகியோர் கலந்துகொண்டு தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.


