இலங்கையின் ஊடகத்துறையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தக் கூடிய ‘மீடியா ஃபெஸ்ட் 2026’ மாநாடு நேற்று (ஜூலை 11) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் ஊடக நிறுவன பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டோரும் ஒரே கூரையின் கீழ் ஒன்றுகூடினர்.
டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியால், உலகளவில் பாரம்பரிய செய்தி ஊடகங்கள் தங்களது செல்வாக்கை இழந்து வரும் ஒரு இக்கட்டான காலகட்டத்திலேயே இந்த மாநாடு நடப்பது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. மக்கள் செய்திகளை நுகரும் விதம், சோசியல் மீடியா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் வரவால் முற்றாக மாறியுள்ளது. இந்த சவால்களை எதிர்கொண்டு, செய்திகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை எவ்வாறு தக்கவைப்பது என்பதே நேற்றைய விவாதங்களின் மையப்புள்ளியாகும்.
டிஜிட்டல் யுகத்தின் அசுர வளர்ச்சியும், நாளாந்தம் மாறும் தொழில்நுட்பங்களும் உலகளாவிய ரீதியில் ஊடகத்துறையை ஒரு பாரிய கேள்விக்குறியின் முன் நிறுத்தியுள்ளன. மக்கள் தகவல்களைத் தேடுவதை நிறுத்தவில்லை, ஆனால் அவர்கள் தகவல்களைப் பெறும் வழிகள் முற்றாக மாறிவிட்டன. இந்நிலையில், இலங்கையின் ஊடகத்துறை அடுத்த கட்டத்தை நோக்கி எவ்வாறு நகரப் போகின்றது? இதற்கான விடையைத் தேடி, நாட்டின் முன்னணி ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பதிப்பாளர்கள் மற்றும் ஊடகப் புதுமைப்படைப்பாளிகள் என அனைவரும் வருகை தந்திருந்தனர்.
இந்த மாநாட்டில், இலங்கை மற்றும் இந்தியாவின் ஆகச்சிறந்த ஊடக ஆளுமைகளின் சிறப்புரைகளும், அனல் பறக்கும் குழு விவாதங்களும் (Panel Discussions) இடம்பெற்றன. குறிப்பாக இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ (ANI) இன் முதன்மை ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ், இந்தியா டுடே (India Today) இன் நிர்வாக ஆசிரியர் மரியா ஷகில் மற்றும் மூத்த ஊடக உத்தியோகத்தர் அசோக் மாலிக் ஆகியோர் சர்வதேச அனுபவங்களை இதில் பகிர்ந்து கொண்டனர்.
வழக்கமான உரை நிகழ்த்தல்களுக்கு அப்பால், நேற்றைய மாநாடானது ஊடகவியலாளர்களும், இளம் படைப்பாளிகளும் தங்களுக்குள் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் (Networking) ஒரு அரிய களமாக அமைந்துள்ளது. மூன்று முக்கிய கருப்பொருள்களின் கீழ், தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் ஒருங்கிணைப்பு பற்றியும், வாசகர்கள் எவ்வாறு வெறும் பார்வையாளர்களாக மாறுகிறார்கள் என்பது பற்றியும் குறித்த அமர்வில் ஆழமாக ஆராயப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக், டிக் டாக், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் மற்றும் தனிநபர் சார்ந்த இன்ஃபுளுவன்சர்களின் ஆதிக்கம் என்பன செய்திகள் மக்களை சென்றடையும் விதத்தை முற்றாக மாற்றி அமைத்துள்ளன. இதனால் பாரம்பரிய ஊடகங்கள் பெரும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. இந்த இக்கட்டான சூழலிலும், செய்திகளின் துல்லியம், நடுநிலைமை மற்றும் மக்களின் நம்பகத்தன்மை ஆகிய அடிப்படைப் பண்புகளைப் பாதுகாத்துக் கொண்டு, ஊடகங்கள் எவ்வாறு தங்களைத் தக்கவைத்துக் கொள்ளப் போகின்றன என்பதுவே இந்த மாநாட்டின் பிரதான பேசுபொருளாக அமைந்திருந்தது.
இந்த மாநாடானது பிரதானமாக மூன்று முக்கிய தலைப்புகளின் கீழ் சுவாரஸ்யமாக முன்னெடுக்கப்பட்டது.
- நம்பகத்தன்மை, உண்மை மற்றும் நம்பகத்தன்மைக்கான போராட்டம்: போலிச் செய்திகளுக்கு மத்தியில் உண்மையை நிலைநாட்டுதல்.
- ஒட்டுமொத்த ஊடக உத்தி: தொலைக்காட்சி, அச்சு ஊடகம் மற்றும் டிஜிட்டல் தளங்களை ஒன்றிணைத்து எவ்வாறு பயணிப்பது?
- பார்வையாளர்களின் மாற்றம்: வாசகர்கள் எவ்வாறு வீடியோக்களைப் பார்க்கும் பார்வையாளர்களாக மாறுகிறார்கள் மற்றும் நிறுவனங்களை விட தனிநபர்களை எப்படி அதிகம் நம்புகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு.
பொதுமக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் மீது மீண்டும் கட்டியெழுப்புவது எப்படி, மாறிவரும் நுகர்வோர் கலாசாரத்திற்கு ஏற்ப புதிய வணிக உத்திகளை எவ்வாறு கையாள்வது, மற்றும் தொழில்நுட்பப் புரட்சியால் ஏற்படும் நன்மைகள்-தீமைகள் எவை போன்ற மிக முக்கியமான இலக்குகளை முன்வைத்தே இந்த மாநாடு நடைபெற்றது. ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலதரப்பட்டோரின் பங்களிப்புடன், இலங்கையின் ஊடகத்துறைக்கு இந்த மாநாடு ஒரு புதிய திசையைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் விஷேட விருந்தினராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மாண்புமிகு டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களும், பிரதம விருந்தினராக வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் மாண்புமிகு டொக்டர் கௌசல்யா அரியரத்ன அவர்களும், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் மேதகு சந்தோஷ் ஜா அவர்கள் மற்றும் ஏனைய முக்கிய அதிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






