நாடு முழுவதும் அச்சுறுத்தலாக இருந்த டெங்கு நோயின் பரவல் தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால், இந்த நிம்மதிக்கு மத்தியிலும் ஒரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் டெங்கு குறைந்தாலும், கடலோர மற்றும் மீனவ கிராமங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் எந்தவொரு குறைவும் ஏற்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபூல் ரோஹண வெளியிட்டுள்ளார். சிலாபத்தில் நடைபெற்ற அவசர டெங்கு ஒழிப்பு திட்டத்தின் போதே அவர் இதனை பகிரங்கப்படுத்தினார்.
சுகாதார துறையினர் மற்றும் தொண்டர் அமைப்புகளின் அதிரடி நடவடிக்கைகளால் டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், நிலைமையை முழுமையாக சீர்செய்ய தற்போது இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் பங்களிப்பு கோரப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக சிலாபம் கடலோரப் பகுதி மற்றும் களப்புப் பகுதியை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் சூழலை சோதனையிடும் நடவடிக்கைகள் இராணுவத்தின் பலத்துடன் தற்போது தீவிரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், மீனவ கிராமங்களில் மட்டும் ஏன் இந்த திடீர் டெங்கு வெடிப்பு? இதற்கான காரணத்தை தேடிச் சென்ற சுகாதார அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பொதுவாக வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களையே நாம் சோதனையிடுவோம். ஆனால், மீனவ கிராமங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பழைய மீன்பிடி படகுகள் (வள்ளங்கள்) மற்றும் அங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகளை மூடியிருக்கும் உறைகளுக்குள் தேங்கியிருக்கும் நீரிலேயே டெங்கு நுளம்புகள் பில்லியன் கணக்கில் பெருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலாபம் மட்டுமன்றி, மாத்தறை போன்ற தூரத்து கடலோர மாவட்டங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
இந்த அபாயகரமான சூழ்நிலையை முறியடிப்பதற்காக, மாதம்பே முகாமின் இராணுவ 7வது கஜபா படைப்பிரிவின் அதிகாரிகள், புத்தளம் மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு மற்றும் சிலாபம் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலக வைத்தியர்கள் உள்ளிட்ட பெரும் பட்டாளமே இப்போது சிலாபத்தில் முகாமிட்டுள்ளது.
இறுதியாக, அதிகாரிகள் ஒரு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். சுகாதார அதிகாரிகளோ அல்லது பாதுகாப்புப் படையினரோ உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து டெங்கு நுளம்புகளை அழிக்கும் வரை பொதுமக்கள் காத்திருக்கக் கூடாது. நீங்கள் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பது உங்களது அண்டை வீட்டாருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ செய்யும் உதவி அல்ல; அது இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் நீங்கள் செய்யும் ஒரு “தேசிய கடமை” என்பதை உணர்ந்து அனைவரும் உடனே விழித்துக்கொள்ள வேண்டும்.
செய்தியாளர்: ஜுட் சமந்த





