கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற 3ஆவது எஸ்.ஏ தடகள சம்பியன்ஷிப் தொடரில், நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியின் நட்சத்திர மாணவனான பஸ்லி முஹம்மது பராஸ் குண்டெரிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தட்டிப்பறித்து அசத்தியுள்ளார்.
தேசிய மட்டத்திலான இந்தத் தொடர் ஆரம்பமானது முதலே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இதில் 15 வயதிற்குட்பட்டோருக்கான குண்டெரிதல் பிரிவில் களமிறங்கிய பராஸ், ஆரம்பத்திலிருந்தே ஏனைய போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார். அனைவரது கண்களும் மைதானத்தின் எல்லைக் கோட்டையே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அந்தப் பரபரப்பான நிமிடத்தில், பராஸ் தனது முழு பலத்தையும் பிரயோகித்து குண்டை வீசினார்.
அவர் கைகளிலிருந்து புறப்பட்ட அந்த விசை, 12.40 மீற்றர் தூரத்தைக் கடந்து போய் விழுந்தபோது மைதானமே அதிர்ந்தது. இந்த அசாத்திய தூரப் பிரயோகம் அவருக்கு தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், இலங்கையின் தடகள வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தையும் பெற்றுக்கொடுத்தது. இந்த அரிய சாதனைக்காக அவருக்கு உத்தியோகபூர்வமாக சான்றிதழும் வெள்ளிப் பதக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த வெற்றியானது வெறும் பதக்கத்தோடு நின்றுவிடவில்லை. ஒரு சாதாரண பிரதேசத்து மாணவன், தேசிய அரங்கில் கொடி கட்டிப் பறக்க முடியும் என்பதை பராஸ் நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்த வரலாற்று வெற்றியையடுத்து, அல் ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர், பாடசாலை நிர்வாகம், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் சக மாணவர்கள் என ஒட்டுமொத்த நீர்கொழும்பு பிரதேசமுமே இந்த இளம் வீரனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளங்களிலும் பராஸின் சாதனைப் படங்கள் தப்போது ட்ரெண்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தித் தகவல்: அரபாத் பஹர்தீன்


