ஜுட் சமந்த
மாரவில: பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் கைபேசிகளும், வீட்டிற்கு வந்து செல்லும் நண்பர்களும் எந்தளவுக்கு பாதுகாப்பானவர்கள் என்ற கேள்வியை எழுப்பும் அதிர்ச்சி சம்பவமொன்று மாரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வெறும் 13 வயதேயான, 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலைச் சிறுமி ஒருவரை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாஹவ – குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
அப்பாவிச் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ள இந்த நபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்துள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறுமியுடன் அடிக்கடி உரையாடி, ஒருகட்டத்தில் காதல் வலையை விரித்துள்ளார். அந்த நபர் திருமணமானவர் என்பது தெரிந்திருந்தும், சிறுமியும் அவரது பேச்சை நம்பி ஏமாந்துள்ளார்.
கடந்த ஜூலை 05 ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறிச் சிறுமியை அழைத்துக் சென்ற சந்தேகநபர், மஹாஹவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று முதன்முறையாக துஷ்பிரயோகம் செய்துள்ளார். அத்துடன் நிற்காமல், மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அதே விடுதியில் வைத்து அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
தேசிய சிறுவர் உதவிச் சேவையின் 1929 இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் உடனடியாகக் களத்தில் இறங்கிய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி, சிறுமியை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றபோதே இந்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேல் விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
உங்கள் பிள்ளைகள் கைபேசியில் யாருடன் பேசுகிறார்கள், குடும்ப நண்பர்களிடம் எப்படி பழகுகிறார்கள் என்பதில் எப்போதும் விழிப்புடன் இருங்கள்!


