ஆராச்சிக்கட்டுவை: அமைதியாகச் சென்றுகொண்டிருந்த அந்த மதிய வேளையில், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த அந்த நபரைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர். கையில் இரத்தம் சொட்டச் சொட்ட ஒரு கூர்மையான கத்தி, முகத்தில் எந்தவித சலனமும் இல்லாத உறைநிலை… பொலிஸார் சற்றும் எதிர்பாராத அந்த வார்த்தையை அவர் கூறினார் — “நான் என் தம்பியைக் கொன்னுட்டேன்!”
இன்று (22) மதியம் 2.10 மணியளவில் இடம்பெற்ற இந்த அதிரடிச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸார் நொடிப் பொழுதில் செயற்படத் தொடங்கினர். சந்தேகநபரை உடனடியாகக் கைதுசெய்த அதிகாரிகள், அவரை அழைத்துக்கொண்டு அவர் சுட்டிக்காட்டிய வீட்டிற்கு விரைந்தனர்.
ராஜகதளுவை பகுதியில் அமைந்துள்ள அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த பொலிஸாருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி. அங்குள்ள ஒரு கட்டிலில், உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் துலேன் ஹசங்க என்ற இளைஞன் சடலமாகக் கிடந்துள்ளார். கொலையுண்ட இளைஞன் மனவளர்ச்சி குன்றியவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது.
அதிர்ச்சியளிக்கும் பின்னணி என்னவென்றால், உயிரிழந்த இளைஞனின் தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர், தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர். பெற்றோர் இருவரும் கடமைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டிலிருந்த மனவளர்ச்சி குன்றிய தம்பியைப் பராமரிக்கும் பொறுப்பு இந்தச் சகோதரனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அன்போடு பராமரிக்க வேண்டிய கை, தம்பியின் உயிரையே பறிக்கும் கூர்மையான ஆயுதமாக மாறியது ஏன்? குடும்பத் தகராறா அல்லது வேறு ஏதேனும் பின்னணியா?
தற்போது உடலத்தைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், நீதவான் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், ஆராச்சிக்கட்டுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜுட் சமந்த


