ஜூட் சமந்த
தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக சிலாபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தம்பிலி (செவ்விளநீர்) மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.
சந்தையில் தம்பிலி ஒன்றின் விலை 250 ரூபாவாக உயர்ந்துள்ள போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் நிலவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, தம்பிலிக்கு மாற்றீடாக பல வியாபாரிகள் இளநீர் ஒன்றினை 150 ரூபா என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டின் முற்பகுதியிலும் இதே போன்று தெம்பிலிக்கு மாற்றீடாக இளநீர் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு முதிர்ச்சியடையாத இளநீரை அதிகளவில் பறித்து விற்பனை செய்தமை, பின்னர் நாடு தழுவிய ரீதியில் பாரிய தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய சூழலிலும் தெம்பிலிக்கு பதிலாக இளநீரை இவ்வாறு தொடர்ந்து விற்பனை செய்தால், எதிர்காலத்தில் மீண்டும் நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை பயிர்ச்செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


