இலங்கையின் இயற்கை வளங்களுக்கும் கரையோரப் பாதுகாப்புக்கும் மிக முக்கிய தூணாக விளங்கும் கண்டல் தாவரங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள கண்டல் தாவரத் தொகுதிகளைக் காப்பாற்றும் நோக்கில், அங்குள்ள 8 முக்கிய கண்டல் மண்டலங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானிப் பத்திரத்தில் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெதி அவர்கள் ஜூலை 27 அன்று கையொப்பமிடவுள்ளார்.
சர்வதேச கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு, சுற்றாடல் அமைச்சின் கேட்போர்கூடத் அரங்கில் நடைபெறவுள்ள விசேட நிகழ்வின்போதே இந்த வரலாற்று முடிவு உத்தியோகபூர்வமாக எட்டப்படவுள்ளது. “கண்டல் தாவரங்கள் மீண்டும் உயிர்பெற வழிவிடுவோம்” என்ற கருப்பொருளில் அண்மையில் புத்தளம் – கரம்ப பகுதியில் நடைபெற்ற சர்வதேச கண்டல் தின விழாவில் சுற்றாடல் அமைச்சரால் அளிக்கப்பட்ட வாக்குறுதியே தற்போது இவ்வாறு உண்மையாக்கப்படுகின்றது.
இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி, கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தில்லையடி (13.06 ஹெக்டேர்), சம்மட்டவாடிய (10.91 ஹெக்டேர்), முதலப்பாலி (22.74 ஹெக்டேர்), கந்தகுளிய – துடாவ (4.43 ஹெக்டேர்), கந்தகுளிய (17.47 ஹெக்டேர்) மற்றும் மண்டலக்குடா (12.82 ஹெக்டேர்) ஆகிய இடங்கள் முழுமையான அரச பாதுகாப்பின் கீழ் வருகின்றன. அத்துடன் முந்தல் மற்றும் கற்பிட்டி ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் உட்பட்ட கரம்ப பகுதியில் அமைந்துள்ள 76.82 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட பிரமாண்டமான கண்டல் நிலமும் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக மாறுகிறது.
இயற்கை அனர்த்தங்களில் இருந்தும் கரையோர அரிப்பில் இருந்தும் நாட்டைக் காக்கும் இயற்கை அரணான கண்டல் தாவரங்களைப் பாதுகாக்கும் இந்த தீவிர முயற்சி இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டிலும் கூட, புத்தளம் மாவட்டத்தின் மாதம்பை (மரம்பெட்டிய), மஹவெவ (வவுல்களே), சிலாபம் (மரவல) மற்றும் ஆரச்சிக்கட்டுவ (குலஸ மற்றும் கருக்குப்பனை) ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பரந்துள்ள 67 ஹெக்டேர் கண்டல் நிலங்கள் வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.
இலங்கையின் களப்புக்கள் மற்றும் முகத்துவாரங்களைச் சுற்றி சுமார் 12,500 ஹெக்டேர் கண்டல் தாவர நிலங்கள் காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. இதில் மிகவும் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், நாட்டின் ஒட்டுமொத்த கண்டல் வளத்தின் பெரும்பகுதி புத்தளம் மாவட்டத்திலேயே செறிந்து காணப்படுகின்றது. இதனால், தற்போதைய இந்த வர்த்தமானி அறிவிப்பானது புத்தளத்தின் சுற்றாடல் சமநிலையைப் பேணப்போகும் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
செய்தித் தொகுப்பு: ஜுட் சமந்த


