சிலாபம் – புத்தளம் வீதியில் ஆனவிலுந்தாவ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது திடீரென வீசப்பட்ட கற்களால், உள்ளே இருந்த பெண் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து அலறித் துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி பின்னணியின் சுவடு பிடித்துச் சென்ற பொலிஸாருக்குக் காத்திருந்தது மேலும் ஒரு திடுக்கிடும் உண்மை.
கடந்த 25 ஆம் திகதி மாலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. வழக்கம்போல பொம்மை தயாரிப்பு தொழிற்சாலையின் பெண் ஊழியர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் சென்ற அந்த பஸ்ஸை, வீதியில் நின்று கொண்டிருந்த இருவர் திடீரென மறித்துள்ளனர். எனினும், பஸ் நிறுத்தப்படாமல் முன்னோக்கிச் செல்லவே, ஆத்திரமடைந்த அவர்கள் வீதியில் கிடந்த கற்களை எடுத்து பஸ்ஸை நோக்கி சரமாரியாக வீசியுள்ளனர்.
இதில் பஸ்ஸின் கண்ணாடி உடைந்து, உள்ளே பயணித்த தொழிலாளி ஒருவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட அவர், சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் நடத்திய மின்னல் வேக விசாரணையில், தாக்குதலை நடத்திய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம் – முகுணுவட்டவன மற்றும் சேதவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் திருகோணமலை விசேட படைப்பிரிவு முகாமில் கடமையாற்றும் ஒரு ராணுவ சிப்பாய் என்பதாகும்! இவர் தற்காலிகமாக புத்தளம் ராணுவ முகாமில் பணியாற்றி வருபவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னணியில் நடந்தது என்ன?
சம்பவத்திற்கு சற்று முன்னர், இந்த இருவரும் புத்தளத்தில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற வேறொரு பஸ்ஸில் பயணித்துள்ளனர். அங்கே அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த இவர்கள், பஸ்ஸுக்குள்ளேயே அடிதடி தகராறில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை கைமீறிப் போகவே, பஸ் ஊழியர்கள் இருவரையும் நடுவழியிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
பஸ்ஸை விட்டு இறக்கப்பட்ட வெறியில் வீதியில் நடந்து வந்த இந்த போதை ஆசாமிகள், அந்த வழியாக வந்த பொம்மை தொழிற்சாலை பஸ்ஸை மறித்துள்ளனர். அது நிற்காமல் செல்லவே, தம் ஆத்திரத்தை அந்த பஸ்ஸின் மீது கல்வீச்சாகக் காட்டியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த இரு சந்தேகநபர்களையும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜுட் சமந்த


