பாராளுமன்றத்தில் இன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரணை மீதான விவாதம் மிகவும் சூடான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், எதிர்க்கட்சியினரின் போலித்தனமான அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் பல காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றில், சிறைச்சாலைகளில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் எவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார்கள் என்பதை எண்களுடன் விவரித்தார். 1983 ஆம் ஆண்டு 53 தமிழ் கைதிகள் கொல்லப்பட்ட கருப்பு ஜூலை சம்பவம் முதல், 2000 ஆம் ஆண்டு பிதுனுவெவ சிறையில் 12 வயது சிறுவன் உட்பட 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டமை, 2002 தங்கள்ள சிறை மோதல், 2011 அனுராதபுர சம்பவம் மற்றும் 2012 வலிகடை சிறைச்சாலை படுகொலைகள் வரை அனைத்தையும் சபைக்கு நினைவூட்டினார்.
குறிப்பாக, தற்போதைய எதிர்க்கட்சிப் பிரமுகர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த காலப்பகுதியிலேயே இத்தகைய கோர சம்பவங்கள் பல இடம்பெற்றன என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், “அன்று பொறுப்புடன் செயல்படத் தவறியவர்கள், இன்று தற்போதைய நீதி அமைச்சரின் நேர்மையான செயல்பாடுகளைக் விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், மகர சிறைச்சாலை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் முற்றிலும் தவறான மற்றும் போலியான தகவல்களைப் பரப்பி வருவதாகச் சாடிய அவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் மௌனமாக இருந்துவிட்டு, இன்று அரசியல் லாபத்திற்காக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டினார். தற்போதைய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி நியாயமான தீர்வைப் பெறத் தொடர்ச்சியாக முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் ஆதிக்கத்தை வேரோடு பிடுங்கி எறிய தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த காலங்களில் இத்தகைய குற்றவாளிகளுக்குப் பின்னணியாக இருந்த அரசியல்வாதிகள், தங்களின் பிடி தளர்வதைக் கண்டு நிலைகுலைந்து போய், இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஒரு பழிவாங்கும் படலமாகப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிவித்த அவர், மக்கள் நம்பிக்கையை இழந்த எதிர்க்கட்சியின் இந்த முயற்சி பாராளுமன்றத்தில் நிச்சயமாகத் தோற்கடிக்கப்படும் என உறுதியளித்தார்.


