ஜூட் சமந்த
மாதம்பே: புத்தளம் மாவட்டத்தின் தென்னந்தோப்புகளுக்கு இடையால் வீசும் சோளகக் காற்றுக்கு மத்தியிலும், மாதம்பே பகுதி நேற்று முதல் ஒரு பசுமைப் புரட்சிக் கூடாரமாக மாறியிருந்தது. வயம்ப (வடமேல்) மாகாண விவசாயத் திணைக்களம் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்த “Agricultural Revival 2026” விவசாயக் கண்காட்சி, மாதம்ப வாராந்த சந்தை பொது மைதானத்தில் கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் மிகக் கோலாகலமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
வழமையான கண்காட்சிகள் போலன்றி, இம்முறை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் பல அதிநவீன தொழில்நுட்பங்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதே மக்கள் கூட்டத்தை அலைமோதச் செய்தது.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க மற்றும் வயம்ப மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி ஏ.எம்.பி.டப்ளியூ அபேசிங்க ஆகியோரின் முதன்மைத் தலைமையில், மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. “பாரம்பரிய விவசாய முறைகளை விடுத்து, தொழில்நுட்பத்தை கையில் எடுத்தால் மட்டுமே உலகச் சந்தையை நாம் பிடிக்க முடியும்” என இதன்போது பிரதம அதிதிகள் சுட்டிக்காட்டினர்.
அங்காடிக்குள், நவீன விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் (Drip Irrigation), புதிய ஒட்டுரகப் பயிர்கள் மற்றும் இயற்கை வழியிலான உரப் பயன்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி, அண்மைக்காலமாக புத்தளம் மாவட்ட விவசாயிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியிருந்த பயிர் நோய்கள் மற்றும் பூச்சித் தாக்கங்களுக்கு, நவீன ஆய்வுகூடங்கள் மூலம் எவ்வாறு உடனடி சிகிச்சை அளிப்பது என்ற நேரடிச் செய்முறைகளும் செய்து காட்டப்பட்டன.
இதனால், வெறும் பார்வையாளர்களாக வந்த விவசாயிகள் பலரும், தங்களின் விவசாயப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளோடு அரங்கை விட்டு வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.
இருப்பினும், இம்முறை கண்காட்சியின் பிரதான ஈர்ப்பாக அமைந்தது முற்றிலும் வேறொரு விடயம். அண்மைக்காலமாக இலங்கையில் பெரும் லாபம் ஈட்டித் தரும் சுயதொழிலாக மாறிவரும் ‘தேனீ வளர்ப்பு’ (Bee keeping) தொடர்பான விழிப்புணர்வே அதுவாகும். சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் தேன் மெழுகு மற்றும் தூய தேன் மூலம் எவ்வாறு மேலதிக வருமானத்தைப் பெறுவது என நிபுணர்கள் விளக்கியபோது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் கூட்டம் அந்த அரங்கைச் சூழ்ந்துகொண்டது.
சுற்றுசூழல் சமநிலையைப் பேணவும், வீட்டுப் பொருளாதாரத்தை உயர்த்தவும் இத்தொழில் எவ்வாறு உதவும் என்பதைப் பலரும் மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
மாதம்ப உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலய அதிகாரிகளின் அயராத உழைப்பில், மிக நேர்த்தியான திட்டமிடலுடன் இந்த “Agricultural Revival 2026” கண்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. புத்தளம், சிலாபம், நாத்தாண்டியா போன்ற சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பாடசாலை மாணவர்கள், விவசாய ஆர்வலர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் மாதம்ப நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இவ்வாறானதொரு வழிகாட்டல் தமக்குக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என இப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.




