இலங்கையின் வரைபடத்தை எடுத்துப் பார்த்தால் வடமேற்குச் கடலோரத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கும் கற்பிட்டி தீபகற்பத்தின் ஒரு பகுதி, விரைவில் அந்த வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் அதிர்ச்சிகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கற்பிட்டி – கீரிமுந்தலம எனும் அழகிய மீனவக் கிராமம் தான் தற்போது கடலின் கொடூரப் பசிக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது!
இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக முழுமையாகக் கடலையே நம்பியிருக்கிறார்கள். ஆனால், கடந்த சில நாட்களாக சீறிப்பாயும் அலைகள், அவர்களின் நிலத்தையும் நிம்மதியையும் சேர்த்தே மெல்ல மெல்ல விழுங்கி வருகிறது. கரையோரங்கள் மிக மோசமாக அரிப்புக்குள்ளாகி வருவதால், கிராமமே கடலுக்குள் மூழ்கும் அபாய எச்சரிக்கை மணிகள் அடிக்கத் தொடங்கியுள்ளன.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த பிரதேச மக்களும், ‘டஜ்பே’ கிராமிய மீனவர் அமைப்பும் இணைந்து, கடலைத் தடுக்க தங்களால் முடிந்தவரை மணல் மூடைகளை அடுக்கி தற்காலிக அரண் அமைத்தனர். ஆனால், தற்போது வீசிவரும் பேரடை புயல் காற்றும், வழக்கத்திற்கு மாறான கொந்தளிப்பான அலைகளும் அந்த மணல் மூடைகளையும் அசால்ட்டாக கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டன!
அதுமட்டுமா? கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல மீன்பிடிப் படகுகள், அலைகளின் மோதலால் பலத்த சேதமடைந்துள்ளன. “வழமையாகக் தவணைக்காலத்தில் கடல் கொந்தளிப்பாக இருப்பது எங்களுக்குப் பழகிய ஒன்றுதான். ஆனால், இம்முறை இதுவரை இல்லாதவாறு அலைகள் மிகக் கொடூரமாக சீறிப்பாய்கின்றன!” எனக் கண்ணீருடன் கூறுகிறார் உள்ளூர் மீனவர் ஒருவர்.
படகுகளை நங்கூரமிடவும், வாடிகளை அமைத்து மீன்பிடித் தொழிலைச் செய்யவும் அவர்களுக்கு இந்தச் சிறிய கரைப்பகுதிதான் ஒரே வாழ்வாதாரம். அதுவும் கடலுக்குள் கரைந்து போனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக முடங்கிவிடும். அதிகாரிகளும் அரசும் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரக் கரைப்ப பாதுகாப்புத் தடுப்புகளை ஏற்படுத்தாவிட்டால், கீரிமுந்தலம கிராமம் என்பது வெறும் வரலாற்றுப் புத்தகங்களில் மட்டுமே எஞ்சியிருக்கும்!
ஜுட் சமந்த



