வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு டிஜிட்டல் அறிவும் உற்பத்தித்திறனும்: புதிய டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்!
பொதுமக்களுக்கு மேலும் திறன் மிக்க, தரமான மற்றும் வெளிப்படையான சேவைகளை வழங்கும் நோக்கில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்காக தேசிய உற்பத்தித்திறன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பான டிப்ளோமா பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த ஜூன் 09 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தில் நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் ஆலோசனைக்கமைய, அரசின் சிறந்த பொது சேவை உருவாக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த டிப்ளோமா பாடத்திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க, நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய சக்தியாக விளங்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன்களையும் ஒழுங்குபடுத்தலையும் உறுதிப்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ள பணியகம், தனது சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் திட்டமிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், “க்ளீன் ஸ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, ஊழல் மற்றும் முறைகேடுகளை குறைத்து, வெளிப்படைத்தன்மை மிக்க திறமையான பொது சேவையை உருவாக்குவதற்காக விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதிகாரிகளை உற்பத்தித்திறன் மற்றும் டிஜிட்டல் அறிவால் வலுப்படுத்துவதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த டிப்ளோமா பாடத்திட்டத்தின் முதல் கட்டத்திற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 100 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சேவை வழங்கும் திறனை மேம்படுத்துதல், டிஜிட்டல் மாற்றங்களுக்கு ஊழியர்களைத் தயார்படுத்துதல் மற்றும் சேவைகளின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிப்பாளர் நிரஞ்ச எஸ். ஜயகொடி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஜே.ஏ.டி.பி. மஞ்சுல உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, மக்கள் மையப்படுத்தப்பட்ட திறமையான அரச சேவையை உருவாக்கும் புதிய அத்தியாயமாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.



