தென் மாகாணம்: அதிகாரத்தையும் பதவிகளையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க நினைக்கும் தற்போதைய சூழலில், மதத் தலைவரொருவர் எடுத்த அதிரடித் தீர்மானம் ஒன்று நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் தென் மாகாண பிரதம சங்கநாயக பதவியிலிருந்து பூஜ்ய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார். கடந்த 14 வருடங்களாக இந்தப் பொறுப்பை வகித்து வந்த நிலையிலேயே, அவர் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார்.
கடந்த ஜூலை 11 ஆம் திகதி சிறிமங்கல பிரிவேனா விகாரையில் நடைபெற்ற தென் மாகாண மகா சங்க சபையின் விசேட கூட்டத்தின் போதே, இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணம் தான் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
தலைமைத்துவப் பதவிகள் என்பது ஆயுட்காலம் முழுமைக்கும் அனுபவிப்பதற்கான ஒன்று அல்ல எனக் குறிப்பிட்ட தேரர், இளம் பிக்குகள் பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், சங்கநாயக பதவிகள் என்பது முதிய வயதில் வழங்கப்படும் கௌரவப் பட்டங்களாகக் கருதப்படக் கூடாது என்றும், சாசனத்தின் வளர்ச்சிக்குச் சுறுசுறுப்பாகப் பங்காற்றக் கூடிய திறமையாளர்களுக்கே அவை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மகா நிகாயவின் தென் மாகாண சங்க சபையால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட இவர், தான் விலகுவதற்கு முன்னர் ஒரு முன்மாதிரியான காரியத்தையும் செய்துள்ளார். தனது வழிகாட்டலின் கீழ் இயங்கி வந்த 14 விகாரைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்புகளைத் தனது சீடர்களிடமும் ஏனைய பிக்குகளிடமும் முழுமையாக ஒப்படைத்த பின்னரே அவர் தனது பதவியைத் துறந்துள்ளார்.


