கொழும்பு: அரச சொத்துக்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளின் பராமரிப்புச் செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 22) வெளியாக்கப்பட்ட தகவல், பொதுமக்கள் மற்றும் அரசியல் தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இதுவரை பராமரிப்பிலேயே முடங்கிக் கிடந்த ஜனாதிபதி மாளிகைகள் இனி எவ்வாறு பயன்படுத்தப்படவுள்ளன என்பது குறித்த முக்கிய திட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் உள்ள சில ஜனாதிபதி மாளிகைகள் ஏற்கனவே நீதிமன்றங்களாக மாற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளதுடன், எஞ்சியுள்ள மாளிகைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கும் திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இம்மாளிகைகளுக்காகச் செலவிடப்பட்ட பிரம்மாண்டத் தொகை குறித்த விவரம் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், நாட்டின் 8 ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக அரசாங்கம் 13.9 மில்லியன் ரூபாவை (1.39 கோடி) செலவிட்டுள்ளதாகப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
இவ்வளவு பெரிய தொகையை பராமரிப்புக்காக மட்டுமே செலவிடுவது குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர், “இந்த மாளிகைகள் பொருளாதார ரீதியில் பயன்படும் திட்டங்களாக முழுமையாக மாற்றப்படும் வரை, அவற்றைப் பாழடைய விடாமல் பராமரிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளது” எனத் தெளிவுபடுத்தினார்.
விரைவில் இம்மாளிகைகள் நாட்டின் வருமானத்தை உயர்த்தும் புதிய திட்டங்களாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


