ஜுட் சமந்த
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய சீருடையை அணிந்திருந்த ஒருவரே, சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் கொஸ்வத்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் நேற்று முன்தினம் (27) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட இரகசிய சுற்றிவளைப்பின் போது, பாரிய அளவிலான கேரள கஞ்சா பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
சந்தேகநபரை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 16 கிலோ 670 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதோடு, போதைப்பொருள் வியாபாரம் மூலம் உழைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 92,783 ரூபாய் ரொக்கப் பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளிலேயே, கைதான நபர் தொடர்பான அதிர்ச்சியூட்டும் பின்னணி வெளிவந்துள்ளது. இவர் 1985 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் துறையில் ‘உப சேவை பொலிஸ் கான்ஸ்டபிளாக’ (Reserve Police Constable) இணைந்து, பின்னர் 1990 ஆம் ஆண்டு சேவையிலிருந்து விலகியவர் என்பது தெரியவந்துள்ளது.
விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பணமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொஸ்வத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கொஸ்வத்தை பொலிஸார் இந்த போதைப்பொருள் வலையமைப்பு குறித்து விரிவான மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


