உலக வங்கியின் நிதியுதவியுடன் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.
இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C பாபு இவ்விடயத்தை தெரிவித்தார்.
மேலும், விவசாய அமைச்சின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 2019ம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஆறு மாகாணங்களை உள்ளடக்கி 11 மாவட்டங்களில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக்கல்லாறு ஆற்றுப்படுக்கையை மையப்படுத்தியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராறு ஆற்றை மையப்படுத்தியும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
காலநிலை பாதிப்பிலிருந்து விவசாயிகள் விரைவாக மீண்டெழுவதே இதன் நோக்கம் எனவும் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்த திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்;
இந்த ஆண்டு 29 குளங்கள் புனரமைப்பு செய்வதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதே வேளை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆலோசணைகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டு விவசாயிகள் செலவீனங்களை குறைத்து தமது உற்பத்தியில் அதிக இலாபம் ஈட்டி வருகின்றனர். விதை நடுகை கருவி, சூரியகல நீர்விநியோக கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப ரீதியான விடயங்களையும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்