வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் பள்ளியில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
வங்க தேசத்தில் உள்ள டாக்காவில் பயிற்சியின் போது, அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI விமானம் பள்ளி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், 19 பேர் உயிரிழந்தனர்.மேலும் 70 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் மதியம் விமானம் விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பள்ளி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை, வங்கதேச ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியது. மாணவர்கள் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைவர்,முகமது யூனுஸ் கூறியதாவது: இந்த விபத்தில் விமானப்படை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி ஊழியர்கள் மற்றும் பிறருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இது தேசத்திற்கு ஆழ்ந்த துக்கத்தின் தருணம்.
விபத்துக்கான காரணத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. இந்த விபத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
