பங்களாதேஷில் அதிரடி: முன்னாள் பிரதமர் ஹசீனாவுடன் பேசிய சில மணி நேரத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் ஷாகிப்பின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
பங்களாதேஷ் கிரிக்கெட் உலகின் நட்சத்திர நாயகனும், சர்வதேச கிரிக்கெட் அரங்கின் முன்னணி ஆல்-ரவுண்டருமான ஷாகிப் அல் ஹசனின் இல்லத்தைக் குறிவைத்து இன்று (06) நடத்தப்பட்டுள்ள திடீர் பெட்ரோல் குண்டு தாக்குதல், அந்நாட்டு அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண நாளொன்றில் இடம்பெற்ற இந்த விபரீதத் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் பின்னணி இருக்கக்கூடும் என்ற சந்தேகம் தற்போது வலுத்துவருகிறது. ஏனெனில், பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் ஷாகிப் அல் ஹசன் இணைய வழியில் (Online) இணைந்து முக்கிய கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தார். அந்த உரையாடல் நிறைவடைந்து சில மணித்தியாலங்களிலேயே இந்தத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். இருப்பினும், இத்தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் அல்லது எவரேனும் காயமடைந்தார்களா என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரரின் இல்லத்தின் மீதே இத்தகைய வன்முறை பிரயோகிக்கப்பட்டிருப்பது, அந்நாட்டு மக்களையும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காலம் காலமாக விளையாட்டு வீரர்களைக் கொண்டாடும் பங்களாதேஷில், ஒரு முன்னாள் தேசிய அணித்தலைவரின் வீட்டிற்குள் புகுந்து பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்திருப்பது ஏன்? இதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சித் தகவல்கள் பொலிஸாரின் தீவிர விசாரணையின் முடிவிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


