நேற்று திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்திருந்தார். அங்கிருந்து காலை 10 மணிக்கு மரக்கடைக்கு வந்து தனது பிரச்சாரத்தை விஜய் துவங்கி இருக்க வேண்டும்.
ஆனால், தொண்டர்கள் மற்றும் திருச்சி மக்களின் அமோகமான வரவேற்பின் காரணமாக விஜய்யின் பிரச்சார வாகனம் சொன்னபடி சரியான நேரத்திற்கு அங்கு வரமுடியவில்லை. மதியம் 2 மணிக்கு வந்த இடத்திற்கு வந்த நிலையில், கிட்டத்தட்ட 3 மணி அளவில் தான் விஜய் தனது பேச்சை தொடங்கினார்.
இந்த நிலையில், அவர் பேசியது பெரிதும் வைரலாகியுள்ளது. அங்கு பேசிய அவர்;
”எல்லோருக்கும் வணக்கம், போருக்கு செல்வதற்கு முன்பு உங்களை பார்க்க வந்துள்ளேன். அரசியலில் களம் இறங்க அண்ணா முடிவெடுத்த இடம் திருச்சி. பெரியார் வாழ்ந்த மண் திருச்சி. கல்வி மதச்சார்பின்மைக்கு பெயர் பெற்ற இடம் திருச்சி. திருச்சியில் தொடங்கிய அனைத்துமே திருப்பு முனையாகதான் அமையும் என சொல்லுவார்கள். ஜனநாயக போருக்கு முன் மக்களை பார்க்க வந்துள்ளேன். மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது பரவசமாகிறது. தவெக தொண்டர்களை பார்க்கும்போது பரவசமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் உள்ளது” என கூறினார்.
மேலும் “திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. சொன்னீர்களே, செய்தீர்களா..” என கேள்வி எழுப்பிய விஜய், ”டீசல் விலை ரூ. 3 குறைப்பு, மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% சதவீதம் இட ஒதுக்கீடு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசுப்பணியில் இரண்டு லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது? நம்ம கேள்வி கேட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரப்போவதில்லை” என அவர் தெரிவித்தார்.

“கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் சட்ட பிரச்சனைகளில் நோ காம்ரமைஸ். நடைமுறைக்கு எது சாத்தியமோ, அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம்” என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.