இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் இருமுனை போருக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜாஆசிஃப் தெரிவித்துள்ளார்.
எல்லையில் இந்தியா அத்துமீற வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட கவாஜா, அதற்கு பதில் அளிப்பதற்கான உத்திகளை பாகிஸ்தான் ஏற்கனவே வகுத்துள்ளதாகவும் கூறினார். எனினும் இதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது எனவும், எந்தவொரு சூழ்நிலைக்கும் தாங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், சட்டவிரோத குடியேறிகள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடந்த 50 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் அனைத்து ஆட்சியாளர்களும் பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்ததாக குறிப்பிட்ட கவாஜா, ஆனால் அவர்கள் யாரும் பாகிஸ்தானின் உதவியை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்றார்.
ஆப்கானியர்கள் பாகிஸ்தானுக்கு, பயங்கரவாதத்தை தவிர ஆப்கானியர்கள் வேறு எதையும் தரவில்லை என்றும் கவாஜா விமர்சித்தார்.