கற்பிட்டி உச்சமுனை களப்பில் ரூ.8 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று செவ்வாய்க்கிழமை (04) நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அதன்படி நேற்று செவ்வாய்க்கிழமை (04) கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் படகுகளால் நடத்தப்பட்ட இந்த சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, கடலோரப் பகுதியில் இரண்டு சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, பதினெட்டு (18) பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கேரள கஞ்சா தொகையுடன் இரண்டு (02) டிங்கிகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மொத்த மதிப்பு எட்டு (08) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் கஞ்சா தொகை மற்றும் டிங்கி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


