இலங்கையிலுள்ள அனைத்துக் காணிகளையும் துல்லியமாக அளந்து, விரைவாக வரைபடமாக்குவது தொடர்பில் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க நிறுவனங்கள், திணைக்களங்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் சபைகள் ஆகியவற்றின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் வருடாந்த செயற்திறன் அறிக்கைகள் தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், தற்போதுள்ள கணிப்புகளின்படி இலங்கையில் 16.5 மில்லியன் நிலப் பிரிவுகள் (land plots) இருக்குமென்றும், அவற்றில் 2.5 மில்லியன் நிலப் பிரிவுகள் அளக்கப்பட்டு, வரைபடமாக்கப்பட்டுள்ளன என்றும் குழுவில் தெரிவித்தனர்.
அதற்கமைய, எஞ்சியுள்ள நிலப் பிரிவுகளை கூடிய விரைவில் அளந்து, வரைபடமாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர், இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் குழுவுக்கு அழைத்து, எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகளும் குழுவில் பரிசீலிக்கப்பட்டன.
மேலும், காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவினால் சட்டபூர்வமான ஒப்பந்தங்கள் இன்றி நிலங்களை குத்தகைக்கு விடுவதால் ஏற்பட்டுள்ள குத்தகைவரி நிலுவைகள் குறித்தும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, எதிர்காலத்தில் முறையான குத்தகை ஒப்பந்தங்களுக்கு உட்பட்டு நிலங்களை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குழுவின் தலைவர் குத்தகைவரி நிலுவைகளை அறவிடுவதற்கான செயன்முறையைத் தயாரித்து, நிலுவைகள் தொடர்பான அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய ஓர் அறிக்கையை குழுவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல மற்றும் (சட்டத்தரணி) பாக்ய ஸ்ரீ ஹேரத் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


