சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை ஜும்மாஹ் தொழுகையின் போது நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்ததுடன், 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த கொடிய தாக்குதலை ஐநா தலைவர் கண்டித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹோம்ஸ் நகரின் அலாய்டீ சமூகத்தினருக்கு சொந்தமான ’இமாம்அலி இபின் அபி தாலிப் மசூதி’யில் ஏராளமான இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததாக சிரியாவின் அதிகாரப்பூர்வ சானா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் 8பேர் உயிரிழந்துள்ளதாகவும், 21 பேர் காயமுற்றுள்ளதாகவும் சானா செய்தியை சுட்டிக்காட்டி சிரியா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி தீவிரவாதிகள் மசூதிக்குள் திட்டமிட்டு குண்டு வைத்திருந்ததாகத் தெரியவந்துள்ளது.


