கல்பிட்டி – பாலாவி பிரதான வீதியில், மாம்புரி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்து இப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று மாலை, வீதியின் ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது, மாம்புரி குறுக்கு வீதியிலிருந்து அதிவேகமாக வந்த KDH ரக வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய முயன்ற வேனின் வேகம், அங்கிருந்த முச்சக்கரவண்டியை நிலைகுலையச் செய்தது.
வேனின் மோதல் வேகம் எந்தளவுக்கு வீரியமாக இருந்ததென்றால், அடித்துச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி அருகில் இருந்த ஒரு வீட்டின் சுவருடன் மோதி நின்றது. அந்த மோதலில் முச்சக்கரவண்டி சுக்குநூறாகச் சிதைந்து உருக்குலைந்தது. இரண்டு வாகனங்களும் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், விபத்தின் கோரம் சம்பவ இடத்தைப் பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்கிறது.
இந்த விபத்து நேர்ந்த போது முச்சக்கரவண்டியின் உள்ளே அதன் சாரதி அமர்ந்திருந்துள்ளார். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நுரைச்சோலை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனத்தை அதிவேகமாகச் செலுத்தியதா அல்லது கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வீதியோரத்தில் பாதுகாப்பாக நின்ற வாகனத்திற்கே இந்த நிலை ஏற்பட்டிருப்பது, வீதிப் பாதுகாப்பு குறித்த அச்சத்தை இப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.




