ஜூட் சமந்த
524 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் களவுமாக தம்பதியினர் ஒருவரை புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று 01 ஆம் திகதி புத்தளம் – மெல்லன்குளம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ஆணமடுவ பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய தம்பதியினர் ஆவர். இவர்கள் சில சமயங்களில் இப்பாகமுவ பகுதியில் உள்ள தமது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தும் இந்த போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
புத்தளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு வெளியூர்களில் இருந்து போதைப்பொருளைக் கொண்டு வந்து விற்பனை செய்யும் தம்பதியினர் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சுமார் ஒரு மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் புத்தளத்திற்கு போதைப்பொருளைக் கடத்தி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினர் வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணி வருவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை வெளிப்படுத்துவதற்காக சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



