ஜூட் சமந்த
பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் லொரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான இரு சிறுவர்களில் ஒருவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று 01 ஆம் திகதி மாலை சிலாபம் – வாரியப்பொல வீதியின் இஹல கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் பிங்கிரிய – ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க ஆரச்சிகே நெதும் சனுல குமாரசிங்க (13 வயது) என்ற சிறுவன் ஆவார். அதே பகுதியைச் சேர்ந்த வீரசேகர செனவிரத்ன அதிகார முதியன்சேலாகே எசத நிமசர அதிகார (13 வயது) என்ற மற்றுமொரு சிறுவன் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறுவர்கள் இருவரும் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, வாரியப்பொல திசையில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த லொரி மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தின் பின்னர் சிறுவர்கள் இருவரும் உடனடியாக பிங்கிரிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்குள்ளான லொரியும் பிங்கிரிய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளதுடன், பிங்கிரிய பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


