ஜூட் சமந்த
போலி ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட சட்டத்தரணி ஒருவருக்கு 5 ½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்கிரமசேகர உத்தரவிட்டுள்ளார்.
மாரவில – கட்டுனேரிய பகுதியைச் சேர்ந்த வர்ணகுலசூரிய டொன் ப்ரீமஸ் ஸ்டான்லி என்ற சட்டத்தரணிக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 மற்றும் டிசம்பர் 21 ஆகிய திகதிகளில், பெண் ஒருவரிடமிருந்து எவ்வித விடயங்களும் எழுதப்படாத வெற்றுத் தாள்களில் கையெழுத்துகளைப் பெற்று, பின்னர் அவற்றைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து காணிப் பதிவுகளை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு 2003 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி முதல் நீண்ட காலமாக சிலாபம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. சுமார் 67 பக்கங்களைக் கொண்ட இந்தத் தீர்ப்பில், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாகப் பின்வரும் உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்துள்ளார்:
• சட்டத்தரணிக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைச் செலுத்தத் தவறினால் மேலதிகமாக 2 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
• பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 40,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த இழப்பீட்டை வழங்கத் தவறினால், அதனை அபராதமாக அறவிடுமாறும், அத்துடன் 24 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி நயோமி விக்கிரமசேகர, குறுகிய காலத்தில் முடித்திருக்க வேண்டிய இந்த வழக்கை சட்டத்தரணி நீண்ட காலம் இழுத்தடித்ததாகச் சுட்டிக்காட்டினார். “இந்தத் தண்டனையை வழங்குவதில் தாம் எவ்விதத்திலும் வருத்தமடையவில்லை” என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த சட்டத்தரணி வெற்றுத் தாள்களில் கையெழுத்து வாங்கும் பழக்கம் கொண்டவர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசு தரப்பில் ஆரம்பத்தில் அரச சட்டத்தரணி கலண கொதலாவல வழக்கை வழிநடத்தியதுடன், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது அரச சட்டத்தரணி தாஹிரா லாஃபிர் முன்னிலையானார். சட்டத்தரணி சார்பில் சட்டத்தரணிகளான சமந்த பெர்னாண்டோ மற்றும் வருணி ஜயசிங்க ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


