சிரந்தி மற்றும் நாமல் ராஜபக்சவிற்கு அழைப்பாணை: விசாரணை பிரிவுகளில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்றைய தினம் (03) நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவின் வெவ்வேறு விசாரணை பிரிவுகளில் ஆஜராகியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவை இன்றைய தினம் காலை 09 மணியளவில் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் ‘சிரிலிய’ (Siriliya) கணக்கிலிருந்த நிதியைப் பயன்படுத்தி வீடொன்றை கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்ய இன்று காலை குற்றப்புலனாய்வுப் பிரிவிக்கு வருகை தந்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ (Kehelbaddara Padme) என்பவருடன் தொடர்புகளைப் பேணியதாக நாமல் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் இவ்வாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்
இன்றைய தினம் தந்தை மஹிந்த ராஜபக்சவின் பாரியார் மற்றும் புதல்வர் ஆகிய இருவருமே வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைப் பிரிவுகளுக்கு வருகை தந்துள்ள நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வெளியில் பெருமளவான ஆதரவாளர்கள் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



