தற்போதைய அரசாங்கத்தின் மக்கள் ஆதரவுத் தளம் 25 வீதத்திற்கும் குறைவான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டார்.
அரசாங்கத்தின் செல்வாக்கு குறித்து தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வின் ரகசிய அறிக்கை, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கம்மன்பில குறிப்பிட்டார். அந்த அறிக்கையின்படி, அரசாங்கத்தின் வாக்கு வங்கி 25% க்கும் சற்று குறைவாகவே காணப்படுவதாகவும், இதன் காரணமாகவே எந்தவொரு மாகாண சபையையும் வெல்ல முடியாது என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்த தயங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
முன்னதாக 43% ஆக இருந்த ஆதரவு தளம் தற்போது 25% ஆகக் குறைந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்:
அந்த வகையில் ரணவிரு (மாவீரர்) என்ற கௌரவம் குறைக்கப்பட்டு, அவர்களை வெறும் சிப்பாய்களாகக் கருதியமை, வடக்குக்கு பௌத்தர்கள் வெறுப்பைப் பரப்பவே வருகிறார்கள் என்ற கருத்துக்கள், பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின் சொத்து விபரங்கள் வெளிப்பட்டமை, அரசாங்கத்தின் நிர்வாகத் தவறுகளால் ஏற்பட்ட நிலக்கரி மற்றும் உப்பு ஊழல்கள் அம்பலமானமை போன்ற காரணங்களினால் அரசாங்கம் தனது செல்வாக்கை இழந்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் 45 இலட்சமாக வீழ்ச்சியடைந்தது. இது வெறும் ஆறு மாத காலப்பகுதியில் 24 இலட்சம் வாக்குகள் அல்லது 34% வீழ்ச்சியாகும் என கம்மன்பில சுட்டிக்காட்டினார்.
2015 இல் நடத்தப்பட வேண்டிய தேர்தலை ரணில் விக்ரமசிங்க 2018 வரை ஒத்திவைத்ததால் ‘மொட்டு’ கட்சி உருவாகி வெற்றி பெற்ற வரலாற்றை நினைவுபடுத்திய அவர், தற்போது தேர்தலை மேலும் ஒரு வருடம் ஒத்திவைத்தால் அரசாங்கத்தின் வாக்கு வங்கி 3% ஆகப் பாதாளத்திற்கு வீழ்ந்துவிடும் என எச்சரித்தார்.
“எனது இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை என்றால், உடனடியாக மூன்று சரத்துக்கள் கொண்ட சட்டமூலத்தைக் கொண்டு வந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்குச் சவால் விடுகிறேன்” என்று அவர் மேலும் தெரிவித்த அவர், 2025 இல் தேர்தலை நடத்தியிருந்தால் இரண்டு மாகாணங்களையாவது வென்றிருக்க முடியும், ஆனால் இனி வரும் காலங்களில் அதுவும் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


