அண்மையில் இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், இதில் இந்திய கடலோர காவல்படையினருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகங்கள் குறித்தும் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து இந்திய அரசாங்கத்திடம் வினவப்பட்ட போது, இந்தத் தாக்குதலில் தங்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று இந்தியா எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் அண்மையில் பாராளுமன்றில் தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த உள்நாட்டு மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல் படையினர் தாக்குதல் நடத்தியதாக பெரும் பரபரப்பை ஏற்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் 03 ஆம் திகதி வென்னப்புவ – வெல்லமங்கரைய துறைமுகத்திலிருந்து ‘தினிதி துவ’ மற்றும் ‘தினிதி துவ 1’ ஆகிய இரு படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஜனவரி 29 ஆம் திகதி அவர்கள் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் அவர்கள் மீது கொடூரத் தாக்குதலை நடத்தியதாக மீனவர்கள் தெரிவித்திந்திருந்தனர்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட மீனவர்களை கடற்படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டு, மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்தார்.
நாட்டில் மொத்தம் 899 இலுவைக் கரைவலை மீன்பிடித் தளங்கள் உள்ள நிலையில், ஒரு சிறு குழுவினர் வலைகளை இழுப்பதற்கு டிராக்டர்களைப் பயன்படுத்த அனுமதி கோரி போராட்டம் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார்.
முன்னைய ஆட்சியின் போது சட்டத்திற்குப் புறம்பாக 183 பேருக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அது முறையற்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார், தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
டிராக்டர்களைப் பயன்படுத்துவதால் கடற்கரை மற்றும் கடல் தளங்கள் சேதமடைவதுடன், சிறிய அளவிலான மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. 1985 ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின் கீழ், பாரம்பரிய முறைகளைப் பாதுகாப்பதற்காகவே புதிய ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தளவில போன்ற பகுதிகளில் பாரம்பரிய முறையில் வலைகளை இழுப்பதன் மூலம் சிறந்த வருமானம் ஈட்டப்படுவதையும் அரசாங்கம் உதாரணமாகக் காட்டியுள்ளது.
2026 ஜனவரி 1 முதல் டிராக்டர் பயன்பாட்டிற்கான தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடையை எதிர்த்து சில மீனவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், சட்டத்தின் அடிப்படையில் முறையான தீர்வைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கவும், கடல் வளங்களை முறையாக நிர்வகிக்கவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மீனவர்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து கலந்துரையாட மீன்பிடி அமைச்சு தயாராக இருப்பதாகவும், சட்டவிரோத முறைகளைக் கைவிட்டு முறையான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் மீனவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



