ஜூட் சமந்த
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்திற்கு இணைவாக, வென்னப்புவ பிரதேசத்தின் இரண்டு இடங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடற்கரை பூங்காக்கள் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளன.
வென்னப்புவ – சின்ட்ராத்ரியா (Sindraathtriya) மற்றும் மேற்கு உல்ஹிட்டியாவ (West Ulhitiyawa) ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட இந்த இரண்டு கடற்கரை பூங்காக்களும், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி தலைமையில் கடந்த 10 ஆம் திகதி மாலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன.
கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தினால் நாடு முழுவதும் 100 கடற்கரை பூங்காக்களை நிறுவும் பாரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே இப் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேசிய திட்டத்தின் கீழ், புத்தளம் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 7 கடற்கரை பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் பிரதி அமைச்சருடன் வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் அன்டன் குமார, வென்னப்புவ பிரதேச செயலாளர் நதீஜா பெர்னாண்டோ மற்றும் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட உதவிப் பணிப்பாளர் மதுனி பெர்னாண்டோ உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


