‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் கொழும்பு முதல் புத்தளம் வரையிலான ரயில் சேவைகள் முடக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் தினங்களில் ரயில் சேவை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலங்களில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் ரயில் பாதைகள் கடுமையாக சேதமடைந்திருந்தன. இதில் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் பாதை மிக மோசமான பாதிப்புக்குள்ளானது.
குறிப்பாக, பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை முற்றாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே திணைக்களத்தின் பாதை பராமரிப்புப் பிரிவினர் கடந்த சில வாரங்களாக இந்தப் பாதையை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்:
இதன் முதற்கட்டமாக மஹவெவ பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக சிலாபம் வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயக்கப்பட்டன.
அந்த வகையில் பதுலு ஓயா பகுதியில் வெகுவாக சேதமடைந்த ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் தில்லையடி பகுதியிலும், புத்தளம் எருக்கலம்பிட்டி பகுதியிலும் சேதமடைந்த ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புத்தளம் தில்லையடி பகுதியின் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நிறைவுபெற்று வருகின்ற நிலையில், புத்தளம் எருக்கலம்பிட்டி ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகள் இன்று முதல் வேகமாக இடம்பெற்று வருகின்றன.
புத்தளம் எருக்கலம்பிட்டி ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகள் நிறைவடைய சில தினங்கள் தேவைப்படும் நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதிகளில் புத்தளம்-கொழும்பு ரயில் சேவையை மீள ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



