ஜூட் சமந்த
சிலாபம் – குருநாகல் பிரதான வீதியின் முகுணுவட்டனை பகுதியில் இடம்பெற்ற இரண்டு சிறிய ரக லொறிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி மாலை 6:50 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிலாபத்திலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறியொன்று, அதற்கு எதிராக வந்த மற்றுமொரு சிறிய லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிலாபம், முகுணுவட்டனை – கொஹொம்பவத்தை பகுதியைச் சேர்ந்த மஹகமகே தொன் அசித லக்மால் என்ற 31 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். விபத்தின் போது பலத்த காயமடைந்த அவர், உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து நடந்தவுடன் மற்றைய லொறியின் சாரதி வாகனத்துடன் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், குறித்த லொறி ஒரு குறுக்கு வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை சிலாபம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து மீட்டனர். இருப்பினும், விபத்தை ஏற்படுத்திய அந்த லொறியின் சாரதி இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


