ஜூட் சமந்த
விசா ஆலோசனை மையங்கள் (Visa Consultancy Centers) என்ற பெயரில் இயங்கி, வெளிநாட்டு வேலைகளை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் மோசடிச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட பலரை அண்மைய நாட்களில் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
ஜா-எல மற்றும் கடான பகுதியில் மோசடி ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 36 இலட்சம் ரூபாவை மோசடி செய்த ஜா-எல, கடான பகுதியில் இயங்கி வந்த விசா ஆலோசனை மையம் தொடர்பில் இரண்டு புகார்கள் கிடைத்துள்ளன. களனி மற்றும் வேயங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இந்தப் புகார்களை அளித்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், போலியான வேலை ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுகள் (Passports) அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கைதான இருவரும் வௌிசர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கனடா வேலைவாய்ப்பு மோசடி கனடாவில் தாதியர் (Nursing) வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 55 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நீர்கொழும்பு விசா ஆலோசனை மையம் ஒன்றும் அண்மையில் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்து கடவுச்சீட்டு மற்றும் வேலை ஒப்பந்தங்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், 2,50,000 ரூபாவை உடனடியாக வழங்க சம்மதித்ததை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கண்டிப் பகுதியில் சுற்றிவளைப்பு இதேவேளை, கண்டிப் பகுதியிலும் இவ்வாறானதொரு சட்டவிரோத மையத்தை நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் வெளிநாட்டு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் பணம் செலுத்தும் போது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


