இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில், புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை மற்றும் விசாரணைகளின் போக்கு குறித்து பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அரசியல் சதி என பேராசிரியர் ரோஹன் குணரத்ன சாடல்
நாட்டின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளரான பேராசிரியர் ரோஹன் குணரத்ன, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையை ஒரு “அரசியல் சதி” என வன்மையாகக் கண்டித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பிற்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மிகவும் மரியாதைக்குரிய பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான சலே அவர்களைக் கைது செய்வது பாரிய அநீதியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய கைது நடவடிக்கையினால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள பயங்கரவாதிகளும், இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு எதிரான சக்திகளும் மட்டுமே மகிழ்ச்சியடைவார்கள் என அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு ஆயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இந்த விசாரணைகளை அரசியல்மயப்படுத்தாமல், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொள்ளும் விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணைகள் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
சுமார் 300 மனித உயிர்களைப் பலிகொண்ட இந்தத் தாக்குதலில் அனைத்து இன மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூரத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவதன் மூலமே, நாட்டில் சட்டம் மற்றும் நீதி சரியாகச் செயற்படுவதை பொதுமக்கள் உணர முடியும் எனவும், உண்மை கண்டறியப்படாவிட்டால், குற்றவாளிகள் சட்டத்திற்கு அஞ்சாமல் ஒளிந்திருக்க முடியும் என்ற தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி விசாரணைகளைச் சீர்குலைக்க முயற்சிப்பதானது, தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் ஊனமுற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சி.ஐ.டி மேற்கொள்ளும் விசாரணைகளில் தர்க்கரீதியான முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, விசாரணைகளுக்குப் பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து அதனைத் திசைதிருப்பாமல், சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



