“முழு நாட்டிற்குமான ஒரே தேசிய பணி” எனும் தொனிப்பொருளில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான புத்தளம் மாவட்ட செயல்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் தலையீடு மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தற்போதைய போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை முறைகள், புனர்வாழ்வுத் திட்டங்கள், சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் மற்றும் மதுவரித் திணைக்களத்தின் அதிரடிச் சோதனைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
தேவையைக் குறைப்பதற்கான முக்கியத்துவம்:
போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கு, அதன் தேவையைக் குறைப்பதற்கான (Reducing Demand) விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இக்கூட்டத்தில் விசேட முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இந்த முக்கியத்துவமிக்க ஆலோசனைக் கூட்டத்தில் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக உற்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமேல் மாகாண பிரதம அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எம். சி. கே. வன்னிநாயக்க, மேலதிக மாவட்ட செயலாளர் (அரசாங்கம்) திருமதி புபுதிகா எஸ். பண்டார, மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திரு. சதுரக்க ஜயசிங்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்:
இவர்களுடன் முப்படையினர், பொலிஸ் அதிகாரிகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறையினர், கடலோர பாதுகாப்புப் படையினர் மற்றும் அபாயகரமான மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய சபை ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
மேலும், புனர்வாழ்வு பணியகம், சமூக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் தனியார் புனர்வாழ்வு நிலையங்களின் பிரதிநிதிகள் எனப் பல நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.





