ஜூட் சமந்த
தங்கோட்டுவ, யோகியான – சிங்கக்குலிய பகுதியில் உள்ள பிரபல இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டின் மதில் சுவர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூடு கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அசித குமார பாலசூரிய என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் எவரும் இருக்கவில்லை என்பதுடன், வீட்டின் உரிமையாளர் தனது தொழில் நிமித்தம் இரத்தினபுரி பகுதிக்குச் சென்றிருந்ததாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தங்கோட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வர்த்தகரைத் தொடர்புகொண்டு விபரித்துள்ளபோதிலும் இச்சம்பவம் குறித்து பொலிஸில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு அளிக்க வர்த்தகர் விருப்பம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகக் கருதப்படும் “அடா” (Ada) எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் தன்னிடம் பலமுறை கப்பம் கோரப்பட்டதாகவும், அதற்குத் தான் இணங்காத காரணத்தினால் அவரது ஆதரவாளர்கள் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என வர்த்தகர் தொலைபேசி ஊடாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 12 போர்ட் (12-bore) ரகத் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரண்டு உயிருள்ள தோட்டாக்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் யார் என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் இச்சம்பவம் குறித்து சிலாபம் கோட்ட குற்றப்பிரிவு மற்றும் தங்கோட்டுவ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


