ஜூட் சமந்த
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சேவையை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானங்களுக்கு, தமது சங்கத்தின் திருத்தங்களுடன் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகச் சங்கத்தின் தலைவர் என்.எச்.கே. ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார். வென்னப்புவ – தும்மலதெனிய பகுதியில் நடைபெற்ற புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது இலங்கை முழுவதும் சுமார் 32,000 பஸ்கள் மற்றும் வேன்கள் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இவற்றின் ஊடாக நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 18.5 இலட்சம் முதல் 19 இலட்சம் மாணவர்கள் வரை பயணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து என்பது மிகவும் பொறுப்புவாய்ந்த ஒரு பணியாகும் எனச் சுட்டிக்காட்டிய பத்மசிறி, ஏனைய போக்குவரத்துச் சேவைகளைப் போலன்றி, இதில் ஈடுபடுபவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளைக் காட்டிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்
அரசாங்கம் கொண்டு வந்த சில ஆரம்பக்கட்ட யோசனைகளைச் சங்கம் ஏற்கவில்லை என்றும், அதற்குப் பதிலாகச் சில திருத்தங்களைச் சங்கம் முன்வைத்ததாகவும், அதற்கு அரசாங்கம் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திருத்தங்களின் ஊடாக பாடசாலை வாகனச் சாரதிகளுக்கான தற்போதைய வயது எல்லையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சாரதிகள் மற்றும் வாகனங்களில் பணிபுரியும் பெண் உதவியாளர்களுக்கு (Matrons) பிரத்யேகச் சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுவரை பாடசாலை வாகனங்கள் தொடர்பான முடிவுகள் அந்தந்த மாகாண சபைகளாலேயே எடுக்கப்பட்டு வந்தன. எனினும், பாடசாலை வாகனங்கள் மாகாணங்களுக்கு இடையிலும் சேவைகளை வழங்குவதால், இதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்று முறைப்படுத்துவது நீண்டகாலமாக நிலவி வந்த பல சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் எனச் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விசேட கலந்துரையாடலில் சங்கத்தின் செயலாளர் வசந்த இலங்ககோன், பொருளாளர் கபில குமாரசிறி மற்றும் தேசிய அமைப்பாளர் கமல் இலங்கரத்ன உள்ளிட்ட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



