மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியிலும், இலங்கையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையோ அல்லது தாமதமோ ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
நேற்று மாலை தொடக்கம் இன்று வரை நாடு பூராகவும் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.
இது தொடர்பாக இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய CPC தலைவர் டி.ஜே. ராஜகருண, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய எரிபொருள் கப்பல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டை வந்தடையும் எனத் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் நிலைமைகள் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தைப் பாதிக்காது என்பதைத் தாம் பொறுப்புடன் தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, இன்று (01) திட்டமிடப்படாத போதிலும் ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாளை பௌர்ணமி (Poya) தினமாக இருந்தபோதிலும், தடையின்றி எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தலின்படி, பீப்பாய்களில் (Barrels) எரிபொருள் வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. எரிபொருளைப் பீப்பாய்களில் கொள்வனவு செய்து, அதனை அதிக விலைக்கு மீள்விற்பனை செய்ய முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், 37 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குப் போதுமான டீசல், 72 நாட்களுக்குப் போதுமான சூப்பர் டீசல், 47 நாட்களுக்குப் போதுமான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும், நீண்ட வரிசையில் நின்று பீதியை உண்டாக்கவேண்டாம் வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




