ஜூட் சமந்த
இலங்கையின் மிகப்பெரிய நடமாடும் சுகாதார சேவையான “ஆரோக்கிய” (Arogya) திட்டத்தின் கீழ், அதன் 58வது நடமாடும் சுகாதார முகாம் அண்மையில் படபொத்த (Batapotha) ஸ்ரீ சுதர்சனாராம புராண விகாரை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வழிகாட்டல் மற்றும் வள பங்களிப்புடன், “Healthy Sri Lanka” (ஆரோக்கியமான இலங்கை) என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமானப் பணியை படபொத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விசேட முகாமின் ஊடாக பொதுமக்களுக்குப் பல மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன, இதில்
- கண் பரிசோதனை மற்றும் பல் சிகிச்சை.
- உடல் நிறை சுட்டெண் (BMI) பரிசோதனை மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனை.
- இரத்தச் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகள்.
- பெண்களுக்கான “சுவநாரி” கிளினிக் மற்றும் சுவாச நோய்களுக்கான சிகிச்சை.
- ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய மருத்துவ ஆலோசனைகள்.
- மனநல மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் ஆகிய சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நோயாளிகளுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டதுடன், மேலதிக மற்றும் நீண்டகால சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், அரச பிரதான வைத்தியசாலைகளில் உள்ள நிபுணத்துவ சிகிச்சை பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முகாம் ஆரம்பமான போதே படபொத்த, நுஹேதெனிய, விமலதிஸ்ஸ மாவத்தை, தேவால வீதி, அருக்கபிட்டிய உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (செய்தி மற்றும் விளம்பரம்) லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னக்கோன் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இந்தத் திட்டம் நடைபெற்றது.
இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சனிக்கிழமைகளில் கிராமப்புற மக்களுக்காகவும், தெரிவு செய்யப்பட்ட புதன்கிழமைகளில் அரச ஊழியர்கள், பொலிஸார் மற்றும் முப்படையினருக்காகவும் இம்முகாம்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் விசேட வைத்தியர்கள் மற்றும் தாதியர் குழுவினர் இந்த முகாமில் சேவையாற்றினர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மக்களும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்த “ஆரோக்கிய” திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் படபொத்த விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய அத்தனாயாயே சந்தரதன ஹிமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.




