உலகப் போர்ப் பதற்றமும் இலங்கையின் பொருளாதார சவால்களும்
இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தப் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இருக்கிற அதிகாரம் ஒரு வல்லரசின் கைகளில் வந்திருக்கிறது. இது பற்றி கண்டனங்கள் எவ்வளவுதான் வந்தாலும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
சனிக்கிழமை (28) மாலை, சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் பவளவிழா தொடர்பில் வித்தக விழா மற்றும் “நீதி முரசு” வெளியீட்டு நிகழ்வு – 2025 என்பன கொழும்பு, இலங்கை சட்டக் கல்லூரியில் நடைபெற்றது.அதில், சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இந்தத் தமிழ் மன்றத்தின் தலைவராக 1982ஆம் ஆண்டில் நான் நான் பதவி வகித்தேன். 75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா தொடர்பில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்ற இந்தத் தமிழ் மன்றத்தின் நிகழ்ச்சியைப் பார்க்கின்ற பொழுது மிகப் பூரிப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் எங்களுடைய காலத்தில் உங்களை விடவும் நான்கு மடங்கு கூடுதலாகத் தமிழ் மொழி மூலம் கற்கும் மாணவர்கள் இருந்தார்கள். இன்று அந்த நிலைமை சட்டக் கல்லூரியில் இல்லை . இதை நிவர்த்தி செய்யவதற்கு அவ்வப்போது முயற்சிகள் எடுக்கப் பட்டாலும் கைகூடவில்லை.
எங்களுடைய காலத்தில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிக்கு இடையிலான மரபு ரீதியான போட்டிகள், சட்ட பீடத்திற்கும் எங்களுக்குமிடையிலான விவாதம், இந்த எழுந்தமான பேச்சுப்போட்டி, அறங்கூறும் அவையத்துப் போட்டி இவைகள் என்ற இந்த மாமூலான விடயங்களை மாத்திரம் நடத்திவிட்டு நாங்கள் திருப்தியடைந்துவிட்டோம். ஆனால், இன்று நீங்கள் நிறைய பரிசில்கள் மாத்திரமல்ல, இன்னும் விவாதப் போட்டிகளையும் கூடுதலாகச் சட்ட பீடம், மருத்துவப் பீடத்திற்கிடையிலான விவகாரங்களையும் கூட்டியிருக்கிறீர்கள் என்பது மிகவும் மனநிறைவைத் தருகிறது. குறிப்பாக, இந்த நிர்வாகம் மிக விமர்சையாக நடத்திய உங்களுடைய 75வது அகவை கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தது; அதில் அடியேனும் பங்குபற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றிருந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன்.
இப்பொழுது உலகம் முழுவதும் பதற்றமாக இருக்கிறது. பெரியதொரு போர் மூண்டிருக்கிறது. மத்திய கிழக்கு எங்கும் யுத்தத்தின் பேரிகை முழங்கிக் கொண்டிருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே இன்னொரு நாட்டைத் தாக்குவதற்கு இருக்கிற அதிகாரம் ஒரு வல்லரசின் கைகளில் வந்திருக்கிற துர்ப்பாக்கிய நிலையைக் காண்கிறோம். இன்று நேற்றல்ல, ஐக்கிய நாடுகள் சபையை ஆரம்பித்ததும் ஐ நா சாசனம் (UN Charter )என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த ஐக்கிய நாடுகள் சாசனத்தை வைத்துக் கொண்டு, இன்று நாங்கள் உள்நாட்டில் பேசுகிற சட்டத்தின் ஆட்சி (Rule of Law)என்பது வெறும் நாட்டின் உள்விவகாரத்தில் மாத்திரமல்ல, சர்வதேச விவகாரத்திலும் அது தேவை என்பதற்காக Rule-based International Order என்று ஒன்று இருக்கிறது.
அதைத் தொடர்ந்தும் மீறுகிற, எடுத்த எடுப்பில் நினைத்ததையெல்லாம் செய்துகொண்டு போகிற ஒரு வல்லரசின் இந்தப் போக்கு சம்பந்தமாகக் கண்டனங்கள் எவ்வளவுதான் வந்தாலும், எங்களைப் போன்ற சிறிய நாடுகளுக்கு இதனால் ஏற்படுகிற பாதிப்புகள் மிகவும் பாரதூரமானவை.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். இப்பொழுது யுத்தத்தின் காரணமாக எண்ணெய் விலை பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. இதற்கு எப்படி நாங்கள் ஈடுகொடுக்கப் போகிறோம்? அடுத்த வருடத்திலிருந்து நாங்கள் பில்லியன் டொலர் கணக்கில் கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாடு வருகிறது. இதை ஒத்திவைப்பதற்கும் சர்வதேச நாணய நிதியம் முன்வருமா என்பது தெரியாது.அதுவும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.
அவர்களாக யுத்தங்களைத் தொடங்கி, இப்படி அக்கிரமங்களைப் புரிந்துகொண்டு செல்லும்போது, மத்திய கிழக்கில் இருக்கின்ற இஸ்ரேல் என்ற ஒரு நாட்டின் தேவைக்காக இவ்வளவு பாரிய ஒரு யுத்தத்தை அவர்கள் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்பது மிகக் கண்டனத்துக்குரிய விடயமாகும்.
சிறிய நாட்டில் இருக்கின்ற எங்களுக்கு இதைக் கண்டித்துப் பேசுவதைத் தவிர வேறேதும் செய்துவிட முடியாது.
ஆனால் இதற்கு ஒர் அடிப்படைக் காரணம் இருக்கிறது, அந்த அடிப்படைக் காரணம் எங்களுடைய நாட்டிலும் எங்களுடைய அரசியல் யாப்பிலும் இருப்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. நிறைவேற்று அதிகாரம் ஒருவரின் கைகளில் இருக்கிறபோது எடுக்கும் இவ்வாறான முடிவுகள் மிகவும் ஆபத்தானவை.
1978ஆம் ஆண்டு ஆக்கிய அரசியலமைப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டுவந்ததிலிருந்து அது நல்லதா,கெட்டதா? என்ற விவாதம் தொடர்ந்து கொண்டு போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்களும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவோம் என்று வாக்களித்துவிட்டு வந்தவர்கள்தான். ஆனால், அவர்களுடைய ஆட்சி முடிந்து போகும் வரை இதைச் செய்யமாட்டார்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது
ஏனென்றால் இதில் இருக்கிற அதிகாரத்தைப் பாவித்து எதையும் செய்யலாம். இது சட்டத்தின் ஆட்சியை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்குள்ளாக்குகின்ற, ஒரு தனிநபரின் கையில் இருக்கிற அதிகாரமாக இருப்பதுதான் இன்று இந்த மிகப் பெரிய அனர்த்தத்தை உலகளாவிய ரீதியிலும் உருவாக்கியிருக்கிறது.
இந்நாட்டிலும் இலைமறை காயாகத் தொடர்ந்தும் ஒவ்வொரு நாளும் இந்த விவகாரம் மிகப்பெரிய பாதிப்பான விடயமாக இருக்கிறது. எடுத்த எடுப்பில் நிறைய மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரம் இன்றைய ஆட்சியாளர்கள் கைகளிலும் இருக்கிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் நாட்டு மக்கள் இவர்களுக்கு அதிகமாகக் கொடுத்துவிட்டார்கள். யாரிடத்திலும் எதையும் கேட்க வேண்டிய அவசியம் கிடையாது.
நீதிமன்றத்தில் இது அரசியலமைப்புக்குக் கட்டுப்பட்டதா இல்லையா என்கிற விவகாரத்தில் அடிக்கடி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கின்ற போது, (Constitutional Matters) வாதிடும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருக்கின்ற இந்த நிலையில், எங்களைப் பொறுத்தமட்டில் வருங்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிச் சட்ட மாணவர்கள் மிகவும் உன்னிப்பாக இருக்க வேண்டும்.சட்டத்தரணிகள் சங்கமமும் உன்னிப்பாக இருக்க வேண்டும்.
அண்மையில் சட்டத்தரணியொருவர் கொல்லப்பட்டபோது முழுச் சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் அதைவிடவும் மிகப்பெரிய பாதிப்பு அரசியல் யாப்பில் கைவைக்கின்றபோது ஏற்படும்.
எதேச்சதிகாரமாகப் பல விடயங்களைச் செய்வதற்கு எத்தனம் நடக்கிறது என்று கேள்விப்படுகிறோம். எனவே, அவ்வாறான விடயங்கள் நடக்கின்ற போது ,அதற்கெதிராகக் குரல் கொடுப்பதில் சட்ட மாணவர்களும், சட்டத்தரணிகளும் முன்னிலை வகிக்க வேண்டும். அது சம்பந்தமாக மக்களுக்குத் தெளிவூட்ட வேண்டும் என்பது எங்களுக்கிருக்கிற மிகப்பெரிய தார்மீகப் பொறுப்பாகும்.



